
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். உலகில் உள்ள ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் சர்வதேச வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றார். அதாவது அறுநூற்று எண்பத்தைந்து மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ போராடுகிறார்கள். போதுமான உணவு, சுத்தமான தண்ணீர், முறையான சுகாதாரம், பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் அடிப்படை கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை அடையவே அல்லல்படும் இம்மக்கள், ஆதரவின்றி பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பு அவர்களை கடந்து செல்வதை, ஒரு பக்கமாக நின்று செய்வதறியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
வறுமையில் வாழ்வது என்றால் என்ன?
உலக வங்கி வறுமையின் மிக விரிவான மற்றும் புரிந்துகொள்ளப்பட்ட வரையறையை நிறுவியிருந்தாலும், அவர்கள் வறுமையை மேலும் இவ்வாறும் விவரித்துள்ளார்:
- தங்குமிடம் இல்லாமை.
- மருத்துவ சுகாதார வசதிகள் இன்மை.
- கல்வியறிவு இன்மை மற்றும் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வசதியில்லாமை
- வேலை இல்லாமை.
- எதிர்காலத்திற்கான பயம்.
- அன்றாட சீவியம்.
- சுத்தமான நீர் வசதியின்மையால் ஏற்படும் நோய்களுக்கு குழந்தைகள் பலியாகுதல்.
- பதவி, பலம் இல்லாமை.
- பிரதிநிதித்துவம் மற்றும் சுதந்திரம் இல்லாமை.
இன்றைய உலகில் வறுமை

ஐநாவின் கூற்றுப்படி, கோவிட்-19 ஒரு தலைமுறையின் முதல் வறுமை அதிகரிப்புக்கு வழிவகுத்தது. 2020 ஆம் ஆண்டில் கூடுதலாக 119 – 124 மில்லியன் மக்கள் மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
உலகளாவிய தொற்றுநோய் இலங்கையின் ஏற்றுமதி வருவாய், நுகர்வு மற்றும் முதலீட்டை வியத்தகு முறையில் குறைத்துள்ளது. இதன் விளைவாக, அதிக ஏற்றுமதி வருவாயை ஈட்டித்தரும் தொழிற்சாலைகளில் (ஆடை, தேயிலை மற்றும் ரப்பர்) வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலைகளை இழந்தனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியமையால் சுற்றுலா, போக்குவரத்து, கல்வி, சந்தை வியாபாரம் போன்ற ஏனைய துறைகள் முழுமையாக இயங்க முடியாதுள்ளது. இதனால் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய வறுமை விகிதம் என்பன அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
நாடு பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்கையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் இடைநிறுத்தி, தொற்றின் பரவலை குறைக்க கொரோனா வைரஸ் சோதனைகளையும் அதிகரித்தது. இந்நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை விரைவாகவும் எளிதாகவும் அடையாளம் காணச் செய்ய வழிவகுத்தது. இது ஆயிரக்கணக்கான இறப்புகளைத் தடுத்து தேசிய பொருளாதாரம் மற்றும் வறுமை விகிதத்தின் மீதான சேதத்தையும் மட்டுப்படுத்தியது.
வறுமை ஒழிப்பு
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்குள் வறுமை ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வறுமை ஒழிப்பு என்பது, அமைதியான, வளமான மற்றும் நியாயமான உலகத்திற்கான தேடலில் சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மீண்டும் மீண்டும் அடையாளம் காணப்படப்படுகிறது.

வறுமையை ஒழிப்பதற்கான முன்னுரிமை நடவடிக்கைகள் பின்வருமாறு:
- நிலையான வாழ்வாதாரங்கள், தொழில் வாய்ப்புகள் மற்றும் உற்பத்தி வளங்களுக்கான அணுகலை மேம்படுத்துதல்
- அடிப்படை சமூக சேவைகளுக்கு உலகளாவிய அணுகலை வழங்குதல்;
- ஆதரவற்றோருக்கு ஆதரவளிக்க சமூக பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குதல்;
- வறுமையில் வாடும் மக்களுக்கும் அவர்களின் அமைப்புகளுக்கும் அங்கீகாரம் அளித்தல்;
- பெண்களின் மீதான வறுமையின் அளவற்ற தாக்கத்தை நிவர்த்தி செய்தல்;
- வறுமையை ஒழிப்பதற்காக ஆர்வமுள்ள நன்கொடையாளர்களின் உதவியை பெறுதல்.
- வறுமையை ஒழிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை தீவிரப்படுத்துதல்.
உலகில் சமத்துவமின்மை மற்றும் தீவிர வறுமையை அகற்றுவதற்கான முயற்சிகள், தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் படிப்படியாக வறுமை விகிதத்தை குறைத்துள்ளது. ஆனால் அனைவருக்கும் இந்த உதவி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
தமது ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாமையையால் ஏற்படும் ஏக்கமும், இல்லாமையால் ஏற்பட்ட விரக்தியும் பிரதிபலிக்கும் ஏழைகள் முகத்தில் மகிழ்ச்சி தோன்றுவது எப்போது?
“இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.“
By Rtr. சாயகி அசோகன்
Image Credits:
Leave a Reply